Pages

வியாழன், பிப்ரவரி 28, 2013

"நீயா நானா" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய மிக முக்கிய சமூக பிரச்சனை என்ன?


மேற்கண்ட தலைப்பு தான் இன்றைய நீயா நானா நிகழ்ச்சி. ஒரு பக்கம் தமிழகம் முழுமையான கல்லூரிகளில் இருந்து பரந்துபட்டு மாணவ மாணவிகள் அமர்ந்திருக்க எதிர் பக்கம் சமூக களப்பணியாளர்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்றைய இளைய சமுதயம் மகா மோசமான அறிவினை கொண்ட அதாவது மார்க் ஷீட்ல நல்ல மார்க் வாங்கினா போதும் என குதிரைக்கு கண் பட்டை கட்டி விட்டது போல ஒரே ஒரு இலக்கு அதாவது மார்க் என்னும் இலக்கை மட்டும் நோக்கி மற்றது எல்லாத்தையும் கோட்டை விட்ட அடி முட்டாள் களாக இருக்கின்றனர் என்பதே அப்பட்டமான உண்மை.

முதலில் அங்கே அமர்ந்து இருக்கும் கிட்டதட்ட 25 மாணவ மாணவிகளிடம் தமிழகத்தின் தலையாய சமூக பிரச்சனை என்ன என கேட்கும் போது மின்சாரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை, இட ஒதுக்கீடு (வேண்டாமாம்... இதை ஒரு தாழ்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவனே சொல்கிறான். காரணம் கேட்டா அவன் நண்பர்கள் மத்தில வெட்கமா இருக்குதாமாம்... ) இவைகள் மட்டுமே சொன்னார்கள். அதிலே ஒருத்தன் தமிழ்க்கு பாதுகாப்பு இல்லைன்னு சொன்னான். சந்தோஷமா இருந்துச்சு. என்னடா படிக்கிறன்னு கேட்டா எம் ஏ தமிழ் இலக்கியமாம். சரி உனக்கு பிடிச்ச 3 தமிழ் எழுத்தாளர்கள் சொல்லு என கேட்ட போது மு.வ ன்னு சொன்னான். பின்ன பல நொடிகள் யோசிச்சுட்டு அடுத்த 2 பேர் சொல்லலை. "பாஸ்"ன்னு சொல்லிட்டான். டேய்... நீ வாழ்க்கையிலே பெயிலாகிட்டு உனக்கு கிடைத்த பொன்னான நேரத்தை "பாஸ்" பண்ணி விட்டு என்ன லாபம்? இது தமிழுக்கே இழுக்கு என்பதை விட உலகம் முழுக்க பரந்து விரிந்து கிடக்கும் ஜெமோ வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இழுக்கில்லையோ? "அழகன்"னு ஒரு பாலசந்தர் படத்திலே ஒரு சின்ன பையன் சொல்லுவான். "நாம பேசாம வேற வீட்டிலே வேற அப்பா அம்மாவுக்கு பிறந்திருக்கலாம்" என. அந்த சின்ன பையன் போலவே சாருவும் அடிக்கடி சொல்ராரே... நான் பேசாம கேரளாவிலே பிறந்து இருக்கலாம், உத்ரகாண்ட்ல பிறந்து இருக்கலாம், பிரான்ஸ்ல பிறந்து தொலைச்சு இருக்கலாம் என. இதுக்கெல்லாம் காரணம் இந்த மாணவர் தான். ஒரு மூன்று தமிழ் எழுத்தாளர் பெயர் கூடவா தெரியாது? என்னே அறிவு!

இதிலே ஒருத்தன் கூட கூடங்குளம் பிரச்சனை, மது பிரச்சனை பத்தி பேசலை. இதைத்தான் நண்பர் ஜெயின் கூபி மிகவும் வருத்தமாக பதிந்தார். எல்லா பிரச்சனைக்கும் மதுவே காரணம்னு இருக்கும் போது ஒரு பையனும் அதை சொல்லலையே என வருத்தமாக பதிந்தார்.

கூடங்குளம் பிரச்சனையை கோபியே எடுத்து கொடுத்து பேச சொன்ன போது ஒரு பேக்கு சொல்லுது "சார் அங்க பிரச்சனைக்கு காரணமே என்.ஜி.ஓக்கள் தான்"ன்னு. உடனே இந்த பக்கம் இருந்த அம்மணி (கவிதான்னு பெயர் - ஏதோ பிரபல ஊடகமாம்)தெள்ள தெளிவாக உதயகுமார் பத்தி பேச்சு எடுத்து விலாவாரியா அந்த பெண் கிட்டயே கேள்வியா கேட்டு தெளிய வைக்க முயன்று தோற்றுப்போனார். எதுவுமே தெரியலை யாருக்குமே அந்த மாணவ மந்தையில்.

களப்பணீயாளர்களில் ஒருவர் அழகா சொன்னார். ஊடகங்களால் ஒரு விஷயம் சென்சிட்டிவ் ஆக்கப்படும் போது இவங்க அதையே பிடிச்சுகிட்டு அந்த வாரம் முழுக்க தொங்குறாங்க. இதே டெல்லி மாணவி ரேப் நிகழ்சி நடக்கலைன்னா ஒட்டு மொத்த இந்தியாவிலே ரேப் என்பதே இல்லைன்னு நினைச்சுகிட்டு அவங்க அதைப்பத்தி இங்க பேசியிருக்கவே மாட்டாங்க. அந்த மீடியாக்களின் மூளைச்சலவை தான் இன்று இவர்களை தர்மபுரி சாதிக்கலவரம், மற்றும் டெல்லி ரேப் பத்தி பேச வைக்குது. சாதிக்கலவரம் தர்மபுரில மட்டுமா நடக்குது. அது கொஞ்சம் அதிகமா ஊடகத்திலே வந்துச்சு அத்தனையே என்றார். அவர் கருத்து சரி தான். அது போல ஒருவர் இந்திய கல்விமுறை பற்றி சாடினார். ஒரு சாதாரண கொசு அடிக்கும் பேட் கூட சைனாவில் இருந்து வருது நம்ம நாட்டுக்கு. ஏட்டு சுரைக்காயா இருக்கு இங்க படிப்பு என்றார். உண்மை தான்!

இடஒதுக்கீடு பிரச்சனைக்கு கடலூர் காரர் ஒருவரும், சிவசங்கர் சாரும் அருமையான ஒரு விளக்கத்தை புரியும்படி எடுத்து சொன்னாங்க. கடலூர் காரர் அந்த பையன்கிட்டயே கேள்வியா கேட்டு பதிலை வாங்கினாரு. ஆனாலும் அவன் மண்டைக்கு புரியவில்லை. அதன் பின்னே ஒரு தாழ்த்தப்பட்ட சமூக பையனை சிவசங்கர் சார் செமத்தையா பிடிச்சுகிட்டு ஒரு கேள்வி கேட்டார் "உன் தாத்தா என்ன செஞ்சாரு?" அந்த பையன் சொன்னான் "கூலி". இப்படியாக அவனை கேள்வி கேட்டு கேட்டு அவனுக்கு புரியுதோ இல்லியோ (சத்தியமாக அவனுக்கு புரியவில்லை அல்லது அவன் தான் பிறந்த சாதியை சலுகையை அனுபவித்து முடித்துவிட்டு அதிலிருந்து வெளிவர அல்லது வெட்கப்பட்டு கொண்டு இருக்கிறான்) மத்தவங்களுக்கு அதாவது விஜய் டிவியை பார்த்தவர்களுக்கு நன்றாக புரிந்தது. அவனுக்கு ஏன் புரியலை என சொல்கிறேன் என்றால் அதன் பின்னர் கோபி இடஒதுக்கீடு வேண்டாம் என சொல்பவர்கள் கை தூக்குங்கன்னு சொன்ன போது அவனும் தூக்கினான். சிவசங்கர் சார் சொல்லும் போது 100 மீட்டர் ஓட்ட பந்தய உதாரணம் சொன்னார். மேல்வர்க்க மக்கள் ஆயிரம் ஆயிரம் வருஷமா அந்த பந்தயத்தில் மோனோபாலியா ஓடிவர்ராங்க.கீழ்ட்தட்டு மக்கள் இப்ப தான் இந்த இட ஒதுக்கீடுக்கு பின்ன ஓடிவரும் நிலை. அதனால கொஞ்சம் முன்னால நிக்க வச்சு பந்தயம் நடத்தப்படுது என விளக்கமாக சொன்னார். என்ன சொல்லி என்ன பயன். எல்லாம் மழுங்கி கிடக்குது அந்த கூட்டத்தில் என்பது வருத்தமான விஷயம்.
இதிலே எல்லா பிரகஸ்பதியும் இங்கிலீஸ் பேப்பர் தான் படிக்குதாம். தமிழ் பேப்பர் படிச்சா அறிவு வளராதாம். கோபி விதர்பா பிரச்சனை என்னான்னு சொல்லுங்கன்னு கேட்டா எல்லாம் வாயிலே களிமண் வச்சுகிட்டு இருக்கான். இந்த லட்சனத்திலே எல்லாத்துக்கும் பேஸ்புக் அக்கவுண்ட் இருக்குதாம். ஆனா தமிழக தலையாய பிரச்சனை எதும் தெரியாதாம். சினிமா பத்தி பேசிக்குமாம் எல்லாம். என்ன கொடுமைடா சாமீ!

இஸ்லாமியர்கள் பற்றிய கேள்விக்கு ஒட்டு மொத்தமாக சொன்ன பதில் என்னை அழவைத்தது என்பது உண்மை. விஸ்வரூபம் படம் நல்லா இருக்குன்னு தான் நான் விமர்சனம் எழுதினேனே தவிர அதன் கருத்து நல்லா இருக்குன்னு எங்கயும் சொல்லலை. ஆனால் அதைக்கூட ஏன் எழுதினோம் என வருத்தமாக இருக்கு. ஏனனில் இந்த நீயா நானா பதிவு செய்து இரு மாதங்கள் ஆகும். அப்போது விஸ்வரூபம் படம் வரலை. அப்போதே அந்த மாணவர்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என சொன்ன போது இந்த படம் இன்னும் என்னன்ன பாதிப்பு உண்டாக்குமோ என பயமாக இருக்கு. அஃப்கோர்ஸ் அது ஆப்கானிஸ்தான் தாலிபான்களை பற்றியது தான் எனினும் இந்த இளைய தலைமுறை முட்டாள்கள் எப்படி புரிந்து கொள்வர் என இன்று அவர்கள் பேசிய மற்ற பேச்சுகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மீனவர்கள் பத்தி பேச்சு வந்த போது மீனவர்கள் குடிசையில் இருக்காங்க, ஏழைகள் அதனால பாவம் என சொல்லும் அளவு ஒரு 5ம் கிளாஸ் படிக்கும் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய அளவே மூளை இருக்கு அவங்களுக்கு. பாவம்.பிரச்சனை என்னான்னு கேட்டா குடிசைல இருக்காங்கலாம். எங்க போய் முட்டிப்பது. மாடிவிட்டிலே இருந்தா பிரச்சனை இல்லாதவன் என நினைப்பு!

அரசியல்வாதிகள் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு ஒரு கேள்வி கேட்டதுக்கு ஒட்டு மொத்தமாக எல்லாரும் மோசம், மட்டம்னு மட்டும் பதில் சொல்றாய்ங்க. தமிழகத்தில் செயல்படும் நல்ல திட்டங்கள் என்னன்னு கேட்டதுக்கு உழவர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், இலவச அரிசி திட்டம், சத்துணவு திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் என எல்லாரும் நிறைய சொன்னாங்க. ஆனா இதல்லாம் அரசியல்வாதிகள் தான் செஞ்சாங்க என்பது மட்டும் ஏன் தெரியலை என்பது தான் என் கேள்வியே.

உங்களுக்கு என்ன மாதிரியான அரசியல் கட்சிகள் பிடிக்கும் என கேட்டதுக்கு கடலூர் பையன் ஜாதிக்கட்சி தான் பிடிக்கும் என சொல்றான். போகட்டும். ஆனா 20 பேருக்கு மேல் "நோ ஐடியா"ன்னு சொல்றாங்க. அட நாறப்பலுவலா... அரசியல் உன் வாழ்வை தீர்மானிக்கக்கூடிய சக்தி என்பது ஏன் உனக்கு புரியலை? உன்னை ஆள்வது என ஏன் புரியலை? இல்லாட்டி "நோ ஐடியா"ன்னு முதல் மாணவன் சொன்னதை அதும் ஒரு கட்சி பெயர்ன்னு நினைச்சுகிட்டானுங்களா... அதையே நானும் செய்வோம் என நினைச்சானுங்களா? அட மகாபாவிங்களா? ஆட்டு மந்தை கூட்டமாக இந்த இளைய சமுதாயம் இருந்து தொலைக்குதேன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது.

கடைசியா ஒரு திருச்சி மாணவிக்கு சிவசங்கர் சார் கையால ஒரு பரிசும், ஜாதிக்கட்சி வேணும்னு சொன்ன பையனுக்கு ஒரு பரிசும் கொடுத்தாங்க. என்னவோ போங்க. இரண்டு பரிசு உண்டு என்பது நிகழ்சியின் கட்டாயம். ஆனா பரிசு கொடுத்து இருக்க கூடாது என்பதே என் எண்ணம். அந்த பரிசு அவர்கள் முட்டாள் தனத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துவிடுமே என்றே அஞ்சுகிறேன்.

களப்பணியாளர்கள் என எதிர்பக்கம் இருந்தவங்க எல்லாரும் 35+ வயது கொண்டவர்கள் தான். அவர்களுடைய வாசிப்பு அனுபவம் அவங்க பதில்ல அருமையா வெளிப்பட்டது. வீட்டிலே ஒரு பேப்பர் அதாவது இந்து பேப்பர் வாங்கினா அதை ஒரு மாதம், ஆறு மாதம் , ஒரு வருடம் படிச்சா இயல்பாகவே ஒருத்தன் அதே குணத்துக்கு இழுத்து போகப்படுவான். தினமலரை தொடர்ந்து படிச்சா செங்கொடி காதல் பிரச்சனையிலே தீக்குளித்து செத்ததா தான் நம்புவான். ஆனா அதே மாணவன் அல்லது மாணவி நூலகத்துக்கு போய் படிக்கும் போது ஒரே விஷயம் ஹிண்டு எப்படி சொல்றான், தினமணி எப்படி, தினகரன் எப்படி, தினமலர் எப்படின்னு எல்லார் கோணமும் தெரியும். பின்ன படிப்பவன் எல்லாத்தையும் கூட்டி கழிச்சு அவனே சுயசிந்தனையோடு ஒரு முடிவுக்கு வருவான். அங்க களப்பணிகாரர்கள் 40+ எல்லாரும் அப்படி பலதரப்பட்ட வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் தான் என புரிந்து கொள்ள முடிந்தது. இந்த இளைய சமுதாயம் இப்படி முட்டாளாக இருக்க காரணம் ஒன்றே ஒன்று தான். வாசிப்பு அனுபவம் இன்மை. எம் ஏ தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் 3 எழுத்தாளர் பெயர் சொல்ல முக்கும் போது இந்த பக்கம் சிவசங்கர் பெரியார் புத்தகங்கள் என்கிறார். ஒரு இஸ்லாமிய நண்பர் குடியரசு தொகுப்புகள் என்கிறார், ஒருவர் வால்கா முதல் கங்கை வரை என்கிறார். (ராகுல்ஜி எழுதிய அந்த வால்கா முதல் கங்கை வரை புத்தகம் நமது அறிஞர் அண்ணா அவர்களால் "மிகச்சிறந்த புத்தகம்" என பரிந்துரைக்கப்பட்ட புத்தகம்)ஒருவர் தனுஷ்கோடி புத்தகம் தோழர் பத்தி சொல்றார். லெனின் புத்தகம் சொல்லப்படுது... யப்பா ... இவர்கள் 35+க்கு போன பின்னெ அதை படிக்கலை என்பது உண்மை. அவர்கள் மாணவர்களாக இருக்கும் போதே படித்தவர்கள் என அவர்கள் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடியுது.

இந்த மாணவ சமுதாயம் இப்படி ஆனதுக்கு காரணம் அவங்க பெற்றோர்கள் மிக முக்கியம். மார்க் எடு மார்க் எடுன்னு ஒரே இலக்கை நோக்கி தள்ளிவிட்டது தான் காரணம். இதை பெற்றோர்கள் தவிர்த்தால் மட்டுமே இனி வரும் சமுதாயம் உருப்படும் என்பது மட்டும் நிச்சயம். மார்க் மட்டும் வச்சுகிட்டு 1200 க்கு 1100க்கு மேல் வாங்கி எதுனா ஐடி கம்பனில சேர்ந்து ஜீன்ஸ் போட்டுகிட்டு காதில் கடுக்கன் மாட்டிகிட்டு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு மாதம் சராசரியா 40,000 வாங்கிட்டு அவன் பிள்ளைகளையும் அப்படியே வளர்த்துவிட்டு ஒரு நாள் விதி வந்ததும் செத்து போவான். என்ன வாழ்க்கை இது? முளை இல்லாம வசதியோடு வாழ்ந்தா அது ஒரு வாழ்க்கையா? போராட தெரியாத, போராட்டம்னா என்னன்னு தெரியாத, மத்தவங்க கஷ்டம் என்னான்னு புரியாம இப்படியே வளர்ந்தா நாமக்கல் கறிக்கோழிக்கும் இவங்களுக்கும் என்ன வித்யாசம்? போன்சாய் மரங்களுக்கும் இவங்களுக்கும் என்ன வித்யாசம்? போன்சாய் பார்க்க அழகு தானே தவிர அதனால் என்ன பயன்? கனி தருமா? பூ தருமா?

ஆகவே பெற்றோர்களே! தயவு செய்து கறிக்கோழி வளர்காதீங்க. நாட்டு கோழில தான் சத்தும் அதிகம், பருந்துகிட்ட இருந்து தன் குஞ்சுகளை தன் சந்ததிகளை காக்கும் வீரமும் அதிகம், விவேகமும் அதிகம் என்பதை உணருங்கள். உங்கள் குழந்தைகளை நூலகங்களுக்கு அனுப்புங்க. எல்லா விஷயங்களையும் படிக்க சொல்லுங்க. அரசியல் என்பது சாக்கடை அல்ல என புரிய வையுங்க. இது தான் நேற்றைய "நீனா நானா" விவாதத்தின் முக்கிய கருவாகும் நான் புரிந்து கொண்ட வகையில்! தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

கருத்துகள் இல்லை: